செய்திகள்

தமிழகம் முழுவதும் எதிர்ப்பு போராட்டம்

ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறக் கோரி வழக்கறிஞர்கள் ஒரு பகுதியினர் திங்கள்கிழமை திருச்சி நகரில் உண்ணாவிரதம் இருந்தனர். திருச்சி வழக்கறிஞர் சங்கத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன், குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கச் செயலர் பி.வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: பாரதீய நியாய சன்ஹிதா 2023 பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் 2023 ஆகியவை இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றியுள்ளன. புதிய சட்டங்கள் பாராளுமன்றத்திலோ அல்லது சட்டத்துறையினரோடனோ எவ்வித விவாதமும் இன்றி அமுலுக்கு வந்துள்ளதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர். திருச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் நேற்று தமிழ்நாடு- புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகிய சட்டங்களில் இந்தி- சமஸ்கிருத பெயர் மாற்றம் செய்யும் மத்திய அரசின் மசோதாவை கண்டித்து நடைபெற்ற இப்போராட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். வக்கீல்கள் தமிழ்செல்வன், பாலகிருஷ்ணன், பன்னீர்செல்வம், சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் வக்கீல்கள் தனசேகர், ஜெயப்பிரகாஷ், தேவேந்திரன், சேகர், விஜயன், ராமலிங்கம், பிராங்க்ளின், சோமசுந்தரம், சரவணன், ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் ஜூலை 5ம் தேதி திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டமும் அதைத் தொடர்ந்து ஜூலை 6ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டமும் மூன்று சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடத்த இருக்கிறது.