செய்திகள்

மீண்டும் எரிகிறது மணிப்பூர்

இம்பால்: மணிப்பூரில் உள்ள ஜிரிபாம் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால், 200க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. ஒரு பிரிவினர் போலீசார் வெளிப்புற சோதனை மையத்திற்கு தீ வைத்தனர். தற்போது மேலும் இங்கு பதட்டம் அதிகரித்துள்ளது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம், கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. தொடர்ந்து ஒன்பது மாதங்களுக்கு மேலாக அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களில், 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்த சோய்பாம் சரத்குமார் சிங், 59, என்ற விவசாயி மர்மமான முறையில் கொல்லப்பட்டார். மீண்டும் வன்முறை வெடித்ததால், அங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். புதிதாக இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானோர் ஜிரிபாம் நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள கிராமங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்த மாவட்ட நிர்வாகம், வன்முறை தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. முன்னதாக இந்திய ராணுவமும், அசாம் ரைபிள் படையும் அங்கே களமிறக்கப்பட்டு அங்கே கலவரங்களை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறது. அங்கே கலவரம் கைமீறி சென்றதால்.. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மணிப்பூர் குத்துசண்டை வீராங்கனை மேரி கோம், ”என் மாநிலம் பற்றி எரிகிறது” என்று சொல்லும் அளவிற்கு அங்கே நிலைமை கைமீறி சென்றுது நினைவிருக்கலாம்.